» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி தாளாளர் அதிரடி கைது; கல்லூரிக்கு சீல்!!
ஞாயிறு 11, பிப்ரவரி 2024 9:04:11 AM (IST)
பாவூர்சத்திரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டார். கல்லூரி வளாகத்திற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் வினோத்குமார் ( 32). இவர் பாவூர்சத்திரம் இ.பி. காலனியில் வசித்து வருகிறார். மேலும் தென்காசி-நெல்லை சாலையில் பாவூர்சத்திரத்தில் உள்ள டிப்ளமோ நர்சிங் பாரா மெடிக்கல் கல்லூரியில் தாளாளராக உள்ளார். இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வினோத்குமார், மாணவி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாவூர்சத்திரம் போலீசுக்கு தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவில் விசாரணை நடத்தி வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் (பொறுப்பு) அனிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, தாசில்தார் பட்டமுத்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருண் பிரசாத், வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், பாவூர்சத்திரம் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் கல்லூரி வளாகத்திற்கு ‘சீல்’ வைத்தனர். அங்கு படிக்கும் மாணவிகள் வேறு கல்லூரிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரித்தனர்.