» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் வ.உ சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சபாநாயகர் மு.அப்பாவு மரியாதை!

வியாழன் 5, செப்டம்பர் 2024 12:14:58 PM (IST)



திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் முன்னிலையில் இன்று (05.09.2024) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஏராளம். அப்படிப் போராடிய தியாகச் செம்மல்தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் . அன்றைய கால வழக்கப்படி திண்ணைப் பள்ளிகூடத்தில் படிப்பை ஆரம்பித்தார். இரவு நேரங்களில் ஆங்கிலக் கல்வியும் பயின்றார். வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரனார் நன்றாக படித்து வழக்குறிஞர் பட்டம் பெற்று ஒழுக்கம் வாய்மை, பிறர் நலம் பேணல் ஆகிய நற்குணங்களைப் பெற்று, அவற்றை வாழ்வின் குறிக்கோள்களாகக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் வீழ்த்திட ‘சுதேசி நேவிகேஷன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்கினார் அதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று புகழ்ப் பெற்றார்.

தமிழ்நாடு அரசின் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் புகழை பொது பொதுமக்களிடம் சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதோடு, இளம் தலைமுறையினர் சுதந்திர போராட்ட வீரர்களை தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான மணிமண்டபங்கள், நினைவு சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், களக்காடு நகர்மன்ற தலைவர் பி.சி.ராஜன், மண்டல தலைவர்கள் மகேஸ்வரி, கஜிதா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினர்கள் உலகநாதன், சங்கர், கோகிலவாணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, திருநெல்வேலி வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory