» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே இரும்பு வியாபாரி வெட்டிக்கொலை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 18, ஜனவரி 2025 9:04:47 AM (IST)
நெல்லை அருகே இரும்பு வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்து வடக்கு புளியம்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவருடைய மனைவி அழகு துரைச்சி. இவர்களுக்கு சேதுபதி (27), அர்ஜூனன் (25) ஆகிய 2 மகன்கள் உண்டு. சேதுபதி, கேரளாவில் கடை வைத்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஹாசினி (2) என்ற மகளும் உள்ளனர்.
சேதுபதி கேரளாவில் தனது பெற்றோர், சகோதரருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதுபதி குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலையில் வீட்டில் இருந்த சேதுபதி பின்னர் வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிச் சென்றார்.
வடக்கு புளியம்பட்டியில் இருந்து தெற்கு அச்சம்பட்டி செல்லும் சாலையில் சேதுபதி சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் திடீரென்று சேதுபதியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சேதுபதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சேதுபதியை கொலை செய்த கொலையாளிகள் யார்?, எதற்காக கொலை செய்தனர்?, முன்விரோதம் காரணமாக அவரை தீர்த்துக்கட்டினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை அருகே பொங்கல் விடுமுறைக்கு வந்த இரும்பு வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை!
வெள்ளி 27, மார்ச் 2026 12:29:29 PM (IST)

