» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை

சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் எச்சரிக்கை விடுத்தார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் DRUG FREE TN செயலியின் பயன்பாடுகளை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்ததாவது: போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் "போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளிலும், அனைத்துவகை கல்லூரிகளிலும் மாணவர்களை உள்ளடக்கிய போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்கள் (ANTI DRUG CLUB) அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவ மாணவிகளிடையே பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் குறித்து அரசிற்கு எளிதாக தகவல் தெரிவிப்பதற்கு தமிழ்நாடு அரசால் DRUG FREE TN என்ற செயலி உருவாக்கம் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விபரங்களை தெரிவிப்பவரின் தகவல் கேட்கப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது.

போதைப்பொருட்கள், கூல்லிப், பான், குட்கா, கஞ்சா, சட்டவிரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அல்லது பயன்படுத்துவோர் குறித்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த மொபைல் செயலியில் பற்றிய தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் பதிவேற்றம் செய்தால், இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பு தகவல் தெரிவிக்கப்படும்.

இந்த செயலியில் தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும். மேலும், புகார் தெரிவிப்பவரின் முகவரி, பெயர் போன்ற தகவல் கேட்கப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது. இந்த செயலியினை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த செயலியை மாணவர்களின் பெற்றோர்களையும் பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற நிலையை அடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாணவர்களின் நலன் கருதி போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தொலைபேசி எண்ணில் வாட்சப் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம். மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், எச்சரித்துள்ளார்.

இக்கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) வள்ளிக்கண்ணு , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் , திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன் , காவல் துணை கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கோட்டக்கலால் அலுவலர் மற்றும் அலுவலர்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory