» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு ஊழியரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த வாலிபர்: நெல்லை அருகே பரபரப்பு!!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:35:01 AM (IST)

நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள இடைகால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (66). இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதே ஊரை சேர்ந்தவர் பெத்துராஜ் மகன் மகாராஜன் (35), கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன் அங்குள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் வைத்து நடைபெற்ற ஊர் பெரியவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அந்த வழியாக மகாராஜன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட ராமகிருஷ்ணன் உடனடியாக மகாராஜனை தடுத்து நிறுத்தி ஏன் இப்படி வேகமாக செல்கிறாய்? என தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்துவைத்து மகாராஜனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்றபிறகும் மகாராஜனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.

இதனால் மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு இடைகால் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று கேனில் பெட்ரோல் வாங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊர் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அப்போது, அங்கு இருந்த ராமகிருஷ்ணன் மற்றும் சிலர் மீது மகாராஜன் திடீரென பெட்ரோல் ஊற்றினார். பின்னர் ராமகிருஷ்ணனை உயிரோடு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராமகிருஷ்ணனின் உடல் முழுவதும் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மகாராஜனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது கும்பலில் இருந்த ஒருவர் மகாராஜனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த மகாராஜன் கூச்சலிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமகிருஷ்ணனையும், மகாராஜனையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராமகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராமகிருஷ்ணன் பாப்பாக்குடி போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் மகாராஜன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் இருக்கிறார். இதனிடையே, தன்னை சிலர் தாக்கியதாக மகாராஜனும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (50), ராமச்சந்திரன் (35), கணேசன் (34) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றதை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரை, வாலிபர் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

AbcdSep 9, 2025 - 03:07:33 PM | Posted IP 162.1*****

நல்லதுக்கே காலமில்லை ...இனி நல்லது சொல்லவும் ஆள் இல்லை என்கிற நிலையை உருவாக்கி விடுவார்கள் போல தெரிகிறது 😥

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory