» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!

வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

கூடங்குளம் அருகே பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் அழகிய நாயகி (50). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். அழகிய நாயகியின் தந்தை இறந்துவிட்டதால் செட்டிகுளத்தில் உள்ள பூர்வீக வீட்டில் அவரது தாயார் மட்டும் வசித்து வருகிறார்.

வீட்டு வேலைக்காக ஊரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த செல்வகுமார் மனைவி சத்யா (29) என்பவரை நியமித்திருந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி அழகிய நாயகி கடந்த 18-ந் தேதி தனது தாயாரை பார்ப்பதற்காக செட்டிகுளத்துக்கு வந்தார். அப்போது எதார்த்தமாக பீரோவை திறந்து பார்த்தார். ஆனால் அங்கு நகைகள் எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் நிஜல்சன் மற்றும் கிருபா ஆகியோர் தனி வியூகம் அமைத்து விசாரணை நடத்தினர். அதில் அழகிய நாயகியின் தாயார் வீட்டில் திருடியது, அங்கு வேலைபார்த்த சத்யா என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சத்யா, அவரது கணவர் செல்வகுமார், உறவினர் தினேஷ் என 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

வீட்டு வேலைகளை கவனித்த சத்யா, எங்கேங்கு, என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதையும் நோட்டமிட்டு வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் அழகிய நாயகிக்கு சொந்தமான 31 பவுன் நகை இருப்பதை அறிந்துகொண்டார். உடனே இதுகுறித்து தனது கணவர் செல்வகுமாரிடம் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து நைசாக 31 பவுன் நகைகளையும் திருடினர். அவற்றை தங்களின் உறவினரான தினேஷ் என்பவரிடம் கொடுத்தனர்.

அதனை தினேஷ் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து பணத்தை பங்குபோட்டு ஆடம்பரமாக செலவழித்தது தெரியவந்தது. சத்யா உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடி அடகு வைத்த 31 பவுன் நகைகளையும் மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory