» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

கடையம் அருகே வீடுகளில் புகுந்து 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் சித்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் ஆழ்வார்குறிச்சியில் இனிப்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முருகேசன் அருகே உள்ள மற்றொரு வீட்டில் குடியிருந்து வருகிறார்.

சுடலைமுத்து தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டார். ஆனால் முருகேசன் செல்லவில்லை. நேற்று முன்தினம் சுடலைமுத்துவின் வீட்டை முருகேசன் பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு தூங்கச் சென்றார். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம் நகை, வெள்ளிப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று காலையில் ஊருக்கு திரும்பிய சுடலைமுத்து வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 பவுன் தங்க நகை, ¾ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை அள்ளிச்சென்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகள், தடயங்களை சேகரித்தனர். கொள்ளைபோன தங்க நகை, வெள்ளிப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.21½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான நாலாயிரம் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.பொட்டல்புதூர் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முஸ்தரி பேகம் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.26 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதேபோல் அதே பகுதி முத்தன் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது.

இந்த சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 4 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? அல்லது வெவ்வெறு நபர்களா? என்பதும் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory