» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகளைத் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகளைத் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின்படி 12,53,264 வாக்காளர்கள் இருந்தனர். தொடர் திருத்தப் பணிகளுக்குப் பின், தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 12,65,302 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, 1,678 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் 20% கூடுதல் இருப்புடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன:

திருநெல்வேலி: 463 இயந்திரங்கள்

அம்பாசமுத்திரம்: 385 இயந்திரங்கள்

பாளையங்கோட்டை: 355 இயந்திரங்கள்

நாங்குநேரி: 418 இயந்திரங்கள்

இராதாபுரம்: 391 இயந்திரங்கள்

என மொத்தம் 2,012 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்து தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2,178 VVPAT இயந்திரங்கள் (30% கூடுதல் ஒதுக்கீடு) வழங்கப்பட்டுள்ளன.


திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் இராதாபுரம் ஆகிய தொகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அங்கு கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1,627 இயந்திரங்கள் தனியாக ஒதுக்கப்பட்டு, பாதுகாப்புடன் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணிகளை பெல் (BEL) நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா இரண்டு பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு முடியும் வரை தொழில்நுட்பக் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

திருநெல்வேலி: வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பணிகளைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பாளையங்கோட்டை: தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் பணிகளைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஷ்தவா, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நாங்குநேரி & இராதாபுரம்: நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து முன்னிலையிலும், இராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி முன்னிலையிலும் நடைபெறும் பணிகளைப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஷ்தவா ஆய்வு செய்தார்.

அம்பாசமுத்திரம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா முன்னிலையில் பணிகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சின்னம் பொருத்தும் பணிகள் அந்தந்தத் தொகுதி அலுவலர்களின் நேரடிக் கண்காணிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory