» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)
நெல்லை அருகே மானூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கோவில் பூசாரி ஒருவர் அவரது அண்ணன் மகனாலேயே சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மானூரை அடுத்த பள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (60). இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். கணபதிக்கும், அவரது அண்ணன் மகனான முருகன் (35) என்பவருக்கும் இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று பகலில் கணபதி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகனுக்கும், கணபதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற முருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது சித்தாப்பா என்றும் பாராமல் கணபதியைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கணபதி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பின்னர் முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான போலீசார், கணபதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய முருகனைப் பிடிக்கப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அப்பகுதியில் பதுங்கியிருந்த முருகனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் பள்ளிக்கோட்டை கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)


