» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!

சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)

தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் நேரடியாகக் களம் இறங்கப் போவதாகவும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் நிறைவுபெற்று, அதில் தமிழக வெற்றி கழகம் (தவெக) அதிக இடங்களில் வெற்றி பெற்றுப் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தான் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயபாஸ்கர் (விராலிமலை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 5 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக இந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்துச் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் நான் போட்டியிட்ட போது, எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். தோல்வி அடைந்திருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தைப் பிற கட்சியினரும் என்னிடம் வெளிப்படுத்தினர். தற்போது காலியாக உள்ள 6 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நான் போட்டியிட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியினரின் மற்றும் பிற கட்சியினரின் விருப்பமாக உள்ளது.

அதன்படி ஆலோசித்த போது, அம்பாசமுத்திரம் தொகுதி உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு, அங்கு நான் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். எத்தனையோ களங்களைச் சந்தித்துவிட்ட நான், இந்த இடைத்தேர்தல் களத்தையும் சந்திக்கத் தயாராகிவிட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

மறுபுறம், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அம்பாசமுத்திரத்தில் சீமான் தனது போட்டியை அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory