» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் கைதான வாலிபர் உயிரிழந்தது எப்படி? காவல் துறை விளக்கம்!

வியாழன் 23, ஜூலை 2026 3:51:25 PM (IST)

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

கடந்த 17.07.2026 அன்று தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர், 120 மதுபான பாட்டில்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையக் காவல்துறையினரால் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், காணொளிப் பதிவுடன் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, அன்று மாலை 5.50 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர், அவர் திடகாத்திரமாக இருப்பதாகவும், உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்றும் சான்றளித்தார். 

பின்னர் சட்ட நடைமுறைகளுக்காக மீண்டும் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, லாக்-அப்பில் பிற கைதிகளுடன் வைக்கப்பட்டார். அங்கு மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அருணாசலம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இச்சம்பவம் காவல் நிலைய சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் அவருக்கு முதலுதவி செய்து குடிநீர் வழங்கினர். காவல் நிலையத்தில் இருந்த அவரது தாயாரும் வரவழைக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை இயல்பானதும், கூடுதல் முன்னெச்சரிக்கையாக உறவினர்களுடன் தொடர் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

மருத்துவமனை அருகே சென்றபோது அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக உறவினர்கள் தெரிவித்த நிலையில், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 23.07.2026 அன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

BabuJul 23, 2026 - 07:47:02 PM | Posted IP 104.2*****

ivanuga arasiyal panna police kidachutanga police mattum yenaku yenna nu irunthuta pothu akkalukum kastam makalukaga valkirom nu soli varipanathai mulunguravanugalukum kastam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory