» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித் தபசுத் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்!

திங்கள் 27, ஜூலை 2026 8:01:44 AM (IST)

snkltherottam.jpg

சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், ஆடித் தபசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடித் தபசுத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவின் 9-ஆம் திருநாளான நேற்று, சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்பாள் தேரில் எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர், பக்தி கோஷங்கள் முழங்க ரத வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. தென்காசி மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திரண்ட பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, பகல் 11.15 மணிக்குத் தேர் நிலையை வந்தடைந்தது.

இத்தேரோட்ட நிகழ்வில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்புப் பணியில் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் கூடுதல் துணைச் கண்காணிப்பாளர்கள் ஜூலியஸ் சீசர், சங்கர், செங்குட்டு வேலவன், நமச்சிவாயம் மற்றும் காவலர்கள் ஈடுபட்டனர்.

திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடித் தபசு காட்சி 11-ஆம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று காலை சுவாமி மற்றும் அம்பாளுக்குக் கும்பாபிஷேகமும், காலை 8.30 மணிக்குச் சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திக்குச் சிறப்பு அபிஷேகமும், 9.30 மணிக்குக் கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரமும் நடைபெறும்.

பகல் 12 மணிக்குக் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6.05 மணிக்குச் சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்குத் தபசு காட்சி அளிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, இரவு 11.45 மணிக்குச் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory