» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 18, அக்டோபர் 2024 12:13:39 PM (IST)
கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி சாயர்புரம் பெரும்படை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் வெங்கடேசன் (50) என்பவரை கடந்த 03.04.2021 அன்று முன்விரோதம் காரணமாக சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி ஏரல் புதுமனை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் இசக்கிமுத்து (45) மற்றும் தூத்துக்குடி சாயர்புரம் பெரும்படை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி பார்வதி (40) ஆகியோரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த வஷித்குமார் நேற்று இவ்வழக்கின் குற்றவாளிகளான இசக்கிமுத்து மற்றும் பார்வதி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜெமிதா, மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேது, விசாரணைக்கு உதவியாக காவலர் சுரேஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.