» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்திட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 11, ஜனவரி 2025 10:25:13 AM (IST)
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் மீளாய்வு செய்யப்பட்டது.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களை முன்னுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் நூறு சதவீதம் தேர்ச்சியை கொண்டு வருவதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு என்ன, மாணவர்கள் தோல்வி அடைவதற்கான காரணங்கள் முதலானவை குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தி, வருகின்ற பொதுத்தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வகையில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, 100% தேர்ச்சி பெற செய்து மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் மாணவர்களின் கற்றல் திறனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் பாடப்பொருளை குறைவாக அளித்து சிறப்பு வகுப்புகள் மூலம் தொடர் பயிற்சி அளித்து, அனுபவமிக்க பாட ஆசிரியர்களின் அனுபவ நுட்பங்களை கையாண்டு, மாணவர்களின் கற்றல் திறனை முன்னுக்கு கொண்டு வந்து தேர்ச்சி பெற செய்வது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும்.
எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் அனைவரும் பொறுப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, முழு தேர்ச்சி சதவீதத்தை அடைவதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட முழு பங்காற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிகல்வி) சாரதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.