» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை: போலீசார் விசாரணை

திங்கள் 26, மே 2025 9:01:55 AM (IST)

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகையன். இவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய மகள் அபிநயா (29). கடந்த 2023-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அபிநயா நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்தானதாக கூறப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் தனித்து வாழ்ந்து வந்தார்.

தற்போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் துப்பாக்கியுடன் சுழற்சி முறையில் அபிநயா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அபிநயாவும் மற்றொரு பெண் போலீஸ் சினேகாவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணி அளவில் திடீரென பணியில் இருந்த அபிநயாவை துப்பாக்கியுடன் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக பெண் போலீஸ் சினேகா மாயமான அபிநயாவை ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தேடினார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் பணியில் இருந்த பகுதியில் ஒரு அறை மூடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சினேகா, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்தபடி அபிநயா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய இடது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளர்  அருண்கபிலன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அபிநயா வைத்திருந்த துப்பாக்கி, தோட்டா ஆகியவை சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிநயா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory