» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பது வேதனை அளிக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கும், புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கும் அதிகமான நிதி தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கெனவே தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளதாக வந்துள்ள செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புது டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதில் எட்டு புதிய ரயில் பாதைகளுக்கான தொகையான 612 கோடி ரூபாயும் அடங்கும். 

இதன்படி, திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைக்கு 347 கோடி ரூபாய், தர்மபுரி – மொரப்பூர் ரயில் பாதைக்கு 22 கோடி ரூபாய், மதுரை – தூத்துக்குடி ரயில் பாதைக்கு 55 கோடி ரூபாய், சென்னை – கடலூர் ரயில் பாதைக்கு 52 கோடி ரூபாய், திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை ரயில் பாதைக்கு 42 கோடி ரூபாய், அத்திப்பட்டு – புதூர் ரயில் பாதைக்கு 42 கோடி ரூபாய், ஈரோடு – பழனி ரயில் பாதைக்கு 50 கோடி ரூபாய், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதைக்கு 4.27 லட்சம் ரூபாய் என மொத்தம் 612 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே, அதாவது நிதி ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளேயே திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை ரயில் பாதை அமைக்கும் திட்டம், அத்திப்பட்டு – புதூர் ரயில் பாதைத் திட்டம், ஈரோடு – பழனி ரயில் பாதைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. 

தமிழ்நாடு அரசின் ஆர்வமின்மை காரணமாகவும், பெரும்பாலான திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளதன் காரணமாகவும் நிதி திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. நிதியாண்டு முடிவதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில், திட்டங்களின் போக்கினை இப்போதே கணித்து நிதியை திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. 

பொதுவாக, ஒரு நிதியாண்டின் இறுதியில் இதுபோன்ற முடிவினை எடுக்க வேண்டிய நிலையில், நிதியாண்டின் துவக்கத்திலேயே தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பது நிதி ஒதுக்கீடே ஒரு கண்துடைப்பு நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிதியை தமிழ்நாட்டிற்கே திரும்ப அளிக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்திலேயே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதை திரும்பப் பெறவும், அந்த நிதியை தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக பயன்படுத்தவும் முதல்-அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory