» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முருகன் வடிவத்தில் நமது அறம் வளர்கிறது: முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு
திங்கள் 23, ஜூன் 2025 8:45:58 AM (IST)

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உட்பட அனைவரும் ஒன்றாக கந்த சஷ்டி கவசம்பாடி சாதனை படைத்தனர்.
மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, பல்வேறு வழிபாடுகள் அங்கு நடந்து வந்தன. நாள்தோறும் ஏராளமானவர்கள் தரிசித்தார்கள்.
மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு திரண்டு வர தொடங்கினர். பலர் காவி உடைகளுடன், மேள,தாளங்களுடன் ஆடிப்பாடியும் வந்தனர். குழுவாக வந்தவர்கள், கந்த சஷ்டி கவசத்தை பாடியபடி வந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் மாநாட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராேஜந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., சன்னியாசிகள், முருகனடியார்கள், சிவ பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
மாலை 5.30 மணி அளவில் பச்சை வேட்டி, துண்டுடன் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மேடைக்கு வந்தார். அவர் பேசியதாவது: மதுரைக்கு என்னை வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தெடுத்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் படை வீடும், 6-வது படை வீடும் மதுரையில்தான் உள்ளன. மதுரை என்பது மீனாட்சி அம்மன் பட்டணம். மீனாட்சி அம்மன் பார்வதியின் அம்சம்.
எனவே முருகனின் தாயாரும், மதுரையில்தான் உள்ளார். முருகப்பெருமானின் தந்தையான சிவபெருமான் முதல் தமிழ் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில்தான் இருந்தார். தாயும், தந்தையும், மகனும் இந்த மதுரையில்தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த புண்ணியத்தின் பலனாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இங்கு அவதரித்தார். அவர் தென் தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் ஆவார். அவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அருகே மயில் சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. தேவர் உருவில் முருகன் மனிதராக வாழ்ந்தார். எனவே தேவரை பணிந்து வணங்குகிறேன்.
இப்போது நாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகிறோம், தரிசனம் செய்கிறோம், குங்குமம் பெறுகிறோம். ஆனால் இந்த தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்லப் போகிறேன். அதாவது ஒரு காலத்தில் மதுரை இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி தரும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இருள் சூழ்ந்திருந்தது. நமக்கு குங்குமம் கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில், குங்குமம் கொடுக்க ஆள் இல்லை.
60 வருடங்களாக அங்கு விளக்குகள் இல்லை.கோவில் மூடப்பட்டிருந்தது. அது மதுரையின் இருண்ட காலம். அதன்பின்னர் 14-ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார், விஜயநகர இளவரசர் குமார கம்பன். நமது நாட்டில் நம்பிக்கைக்கு அழிவில்லை என்பதும், அதனை யாராலும் அழிக்க முடியாது என்பதும் நமக்கு தெரிந்தது. நமது கலாசாரம் மிகவும் ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது.
கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது. இன்றும் அப்படியே இருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும். இதுதான் இந்த தெய்வீக பூமியின் பலன். முருகன் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து வளர்கிறது. நாம் எல்லோரும் இங்கு முருக பெருமானுக்காக வந்திருக்கிறோம். அநீதியை அழித்ததால், அவர் புரட்சி தலைவர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... வீர வேல் முருகனுக்கு அரோகரா...
ஒரு கட்சி தலைவர் கேட்கிறார். முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள். உத்தரபிரசேதம், குஜராத்தில் நடத்த வேண்டியது தானே எனக்கேட்டு பிரிவினையை ஏற்படுத்தப்பார்க்கிறார். இதுபோல், பலரும் கேள்வி கேட்கிறார்கள். இன்று முருகனை பார்த்து கேட்பார்கள், நாளை சிவபெருமான், அம்மனை பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது. இந்த சிந்தனை நீண்ட காலமாக உள்ளது.
நான் 14-வது வயதில் சபரிமலைக்கு போனேன். தைப்பூசத்தில் திருத்தணிக்கு போவதை பார்த்தவன். நான் சென்னை மயிலாப்பூரில் படித்தபோது, நெற்றியில் பட்டையுடன் பள்ளிக்கு சென்றவன். சிறிது காலத்தில் மாற்றம் தெரிந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்டார்கள். எனவே, என் 14-வது வயதில் நான் இந்த கேள்விகளை எதிர்கொண்டவன். எல்லோருக்கும் இந்த சம்பவம் நடந்திருக்கும். நாம் யாரும் அதனை பெரிதுபடுத்தவில்லை.
இந்துக்கள் அமைதியானவர்கள், பண்பானவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்வதராக இருக்கலாம். ஒரு முஸ்லிம், முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்சினை. ஒருவன், இந்துவாக இருந்து விட்டால், அவன் மதவாதி என்பது அவர்களின் போலி முகமாக உள்ளது. என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதனை கேட்க நீங்கள் யார்?. உங்கள் நம்பிக்கையை நாங்கள்கேள்வி கேட்கவில்லை. அதே நாகரிகத்தை நீங்கள் கடைபிடியுங்கள். என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதையை செய்யாதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.
முருகன், தமிழ் கடவுள் ஆனால், அவர் எல்லா இடத்திலும் பரந்து இருக்கிறார். வட இந்தியாவில் கார்த்திகேயராக, ஆந்திரா, கர்நாடகத்தில் சுப்பிரமணியராக, தமிழகத்தில் முருகனாக இருக்கிறார். முருக பெருமான் உலகம் முழுவதும் பரந்திருந்தாலும், அவரது பாதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. என் கடவுளை கேலி செய்தனர், கலாசாரத்தை கேலி செய்தனர். நம் மதத்தை பற்றி மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள். நாம் அமைதியானவர்கள், சகித்து கொள்ளக்கூடியவர்கள் என்பதால், இப்படி செய்கிறார்கள்.
முருக பக்தர்கள் அனைவருக்கும், ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளை திட்டும் கூட்டம், காணாத கூட்டமாகி விடும். இன்று இந்த கூட்டம் வரும், நாளை வேறு ஒரு கூட்டம் வரும். எத்தனை நாள் பொறுப்பது. முருகனை பற்றி இழிவாக சொன்னால், உங்கள் இதயம் நொருங்க வேண்டாமா, பதற வேண்டாமா,. நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்ற தேவையில்லை. ஆனால், நம்மை காப்பாற்றுவதற்கு கைமாறு செய்ய வேண்டாமா? நன்றியை காட்ட வேண்டாமா, நன்றியை சொல்ல வேண்டாமா? இந்த மாநாட்டின் மூலம் ஒரு முடிவுக்கு வருவோம். எப்படி மின்னல் கண்களை குருடாக்குமோ, காட்டாற்று வெள்ளம் கரைகளை உடைக்குமோ அதுபோல், பொங்குவோம்.
இவ்வாறு பவன் கல்யாண் பேசினார். தொடர்ந்து மாநாட்டு மேடையில் இருந்தவர்களும், மாநாட்டுக்கு வந்திருந்தவர்களும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடினர். இது ஒரு கின்னஸ் சாதனையாக அமைந்தது. மாநாடு இரவு 9 மணி அளவில் நிறைவுபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
திங்கள் 23, ஜூன் 2025 4:40:58 PM (IST)

மாம்பழ விவசாயிகளை காத்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை : சீமான் வலியுறுத்தல்..!!
திங்கள் 23, ஜூன் 2025 12:27:04 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் : உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேச்சு
ஞாயிறு 22, ஜூன் 2025 12:15:31 PM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)
