» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)
கோத்தகிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு முடிந்ததும் அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் போலீசாரிடம், எங்கள் பள்ளியில் அறிவியல் ஆசிரியாக வேலை பார்த்து வரும் செந்தில்குமார் என்பவர் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
அவர் இதுபோன்று பல மாணவிகளையும் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகள் தங்களுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சியான போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர். விசாரணையில் முடிவில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டியில் உள்ள கிளை ஜெயிலில் அடைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செந்தில்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக சில மாணவிகள் ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இதனை அறிந்த அவர் அந்த மாணவிகளை மிரட்டியதால் அவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி உள்ளதால், முன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-4 தேர்வு குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு : மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:20:28 PM (IST)

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

NAAN THAANJul 5, 2025 - 11:38:21 AM | Posted IP 172.7*****