» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

வியாழன் 12, மார்ச் 2026 8:21:36 AM (IST)

"வளமான தமிழகத்தை உருவாக்குவதே எங்களது இலக்கு. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்சி பஞ்சப்பூரில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொன்னாடை அணிவித்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உருவம் பொறித்த நினைவுப் பரிசை வழங்கினர்.

தனது உரையை 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறித் தொடங்கிய பிரதமர், கார்கில் போரில் வீரமரணமடைந்த திருச்சியின் மைந்தர் மேஜர் சரவணனின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத் தொடர்பு மற்றும் கம்பராமாயணத்தின் மீதான தனது ஈடுபாட்டையும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி என்பது ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம் (ATM) ஆக மாறிவிட்டது. அமைச்சர்கள் மாறினாலும் அதிகாரம் ஒரு வம்சத்திடமே உள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரே சிக்கியுள்ளார். இது இளைஞர்களின் கனவைச் சிதைக்கிறது.

நெல்லுக்குக் கூடுதல் விலை மற்றும் தானியக் கிடங்குகள் அமைப்பதாகக் கூறி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. சட்டவிரோத மணல் கொள்ளையர்களுக்கு தி.மு.க. பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.

மத்திய அரசின் திட்டங்களான ஜன்தன், முத்ரா மற்றும் இலவச வீடு வழங்கும் திட்டங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், "தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் போது தமிழகப் பெண்கள் அச்சமின்றி வாழ்வதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று வாக்குறுதி அளித்தார்.

பன்னாட்டு விவகாரம் குறித்துப் பேச்சு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய பிரதமர், "எந்தச் சூழ்நிலையிலும் இந்தியர்களின் நலனுக்கே எங்கள் அரசு முதலிடம் அளிக்கும். எரிசக்தி விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டாலும், மக்கள் பீதி அடைய வேண்டாம்; வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory