» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் புதிய இரட்டை ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தது: பயணிகள் மகிழ்ச்சி!

திங்கள் 6, ஏப்ரல் 2026 11:08:39 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான நாகர்கோவில் டவுன் - இரணியல் இடையேயான புதிய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து, ரயில்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பயண நேரமும், நடைமேடை சிரமங்களும் குறைந்துள்ளதால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நாகர்கோவில் டவுன் முதல் திருவனந்தபுரம் வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, நாகர்கோவில் டவுன் முதல் இரணியல் வரையிலான சுமார் 12 கி.மீ. தூரத்திற்குப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் புதிய பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

புதிய தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய, முதல் நாளில் ரயில் என்ஜின் மெதுவாக இயக்கப்பட்டது. இரண்டாம் நாளில் அதிவேகமாக இயக்கப்பட்டு பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கடந்த 30-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனால் சில நாட்கள் பயணிகள் சிரமங்களைச் சந்தித்தனர்.

1-வது நடைமேடை வசதி: பணிகள் அனைத்தும் முழுமையடைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் புதிய தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கின. குறிப்பாக, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடை வழியாக இயக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, அனந்தபுரி மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவனந்தபுரம் மார்க்கமாகச் செல்லும்போது 2-வது நடைமேடையிலும், நாகர்கோவில் மார்க்கமாக வரும்போது 3-வது நடைமேடையிலும் நிறுத்தப்பட்டன. இதனால் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் கனமான உடைமைகளுடன் வரும் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

மகிழ்ச்சியில் பயணிகள்: தற்போது ரயில்கள் நேரடியாக 1-வது நடைமேடைக்கே வந்து செல்வதால், பயணிகள் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. குமரி மாவட்ட ரயில் பயணிகளின் நீண்ட கால இன்னல்களுக்கு இந்த புதிய வசதி ஒரு தீர்வாக அமைந்துள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory