» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் பரப்புரை!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:33:10 AM (IST)



திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து, இ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் பரப்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற மேனாள் உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர், குரும்பூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பரப்புரை ஆற்றினார்.

தெற்கு ஆத்தூர் பள்ளிவாசல் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திமுக செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ. மீராசா மரைக்காயர், தெற்கு ஆத்தூர் நகர செயலாளர் முஹம்மத் ஆரிஃப், பொருளாளர் ராஸிக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் நகரம், சுற்று வட்டார பொதுமக்களும், கூட்டணி கட்சிகளின் அங்கத்தினரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குரும்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குரும்பூர் நகர தலைவர் கஸ்ஸாலி ஸஹாபுத்தீன், செயலாளர் இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் - குறிப்பாக பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் காயல்பட்டினம் நகர்மன்ற தலைவருமான கே.எஸ். முத்து முகம்மத் தலைமை தாங்கினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜகான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காயல் அமானுல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டாக்டர் காயல் மௌலானா, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் உமர் ஆகியோர் பரப்புரையாற்றினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற மேனாள் உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் இக்கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை ஆற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் எம்.எஸ். நூஹ் சாஹிப், நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ். அபூ சாலிஹ், சுயலக அணி மாநிலத் துணைத் தலைவர் என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, மாநில கவுரவத் துணைத் தலைவர் எம்.கே. முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, ஃபாரூக், எம்.ஏ. முஹம்மத் ஹசன், மாவட்ட - நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், எம்.இசட். சித்தீக்,, ஜப்பான் உதுமான், தகவல் தொழில்நுட்ப அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ், எம்.ஏ.சி. சுஹைல் இப்ராஹீம், ஜிஃப்ரீ உட்பட காயல்பட்டினத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கூட்டணி கட்சிகளின் அங்கத்தினரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் சமுதாயம் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த, செய்யவிருக்கிற நலத்திட்டப் பணிகளை விளக்கிப் பேசிய அவர், சிறுபான்மையினருக்கு எப்போதும் எதிராகவே செயல்படும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக மாநில உரிமைகளை அடமானம் வைக்கிறது என்றும் குற்றம் சாட்டிப் பேசினார்.

இம்மூன்று பரப்புரைக் கூட்டங்களுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் செய்ததோடு, அனைத்து நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory