» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)



விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பூ சுந்தர், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, பாஜக மாநிலத் துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர் வாக்குச் சேகரித்தார். விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து அவர் 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்குக் கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளன.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை 'அப்பா' என்கிறார்கள், ஆனால் அவர் ஆட்சியில் எல்லாம் 'தப்பாக' தான் நடக்கிறது.

இன்றைய தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. பள்ளிக் குழந்தைகள் கையில் விதவிதமான வண்ணங்களில் போதை மிட்டாய்கள் புழங்குவதாக அரசுப் பள்ளி ஆசிரியர்களே கவலை தெரிவிக்கின்றனர். கல்லூரிகளின் வாசல்களிலேயே போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தின் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது.

பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி என்று கூறிவிட்டு, அவர்களை 'ஓசியில் போகிறவர்கள்' என்று இழிவுபடுத்திப் பேசுவதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலாச்சாரம். பெண்களை அசிங்கப்படுத்துவதையும் இழிவுபடுத்துவதையும் தான் திமுக செய்து வருகிறது. எனவே, தொகுதி மேம்பாட்டிற்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் அதிமுக வேட்பாளர் சத்யாவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன், பால்ராஜ், நகரச் செயலாளர் மாரிமுத்து, பாஜக மாவட்டச் செயலாளர் சரவணன்கிருஷ்ணன், கந்தசாமி, அம்மா பேரவை வரதராஜபெருமாள், அமமுக ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory