» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீசார் சுட்டதில் காயம்: தென்காசியில் பாதுகாப்பு இல்லை - தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட வாலிபர் புகார்!

வியாழன் 30, ஏப்ரல் 2026 8:06:24 AM (IST)



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் பனைத் தொழிலாளி மணிகண்டன் (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே பனை மரத்திலிருந்து கள் இறக்கியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலின் போது, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தனது துப்பாக்கியால் மணிகண்டனைச் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மருத்துவமனையில் தனது மகனுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், விசாரணை என்ற பெயரில் போலீசார் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருவதாகவும் மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். தனது மகனின் உயிர் பாதுகாப்பு கருதி அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மணிகண்டனை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்பி சிலுவை அவர்களின் முயற்சியால், மணிகண்டன் தென்காசி மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்டுத் தூத்துக்குடியில் உள்ள அற்புதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்துத் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், "தென்காசி மருத்துவமனையில் இருந்தபோது தினமும் போலீசார் வந்து என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டி வந்தனர். அங்கு எனக்குப் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன். எனது உயிருக்கும் குடும்பத்தின் பாதுகாப்புக்கும் பயந்துதான் தூத்துக்குடி மருத்துவமனைக்கு வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

தற்போது தூத்துக்குடியில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory