» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக : காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு!

திங்கள் 11, மே 2026 9:00:41 AM (IST)



குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இதில் அரசியல் தலையீடுகள் இருக்காது என்று முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ச. ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் தனது முதல் நாள் பணியைத் தொடங்கினார். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சட்டம் - ஒழுங்கு குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதிரடி காட்டினார்.

நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சருக்கு, தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையிலான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின், தனது அறைக்குச் சென்ற விஜய், இருக்கையை வணங்கிவிட்டு அதில் அமர்ந்தார். பின்னர், பச்சை நிற மையால் தனது முதல் கோப்புகளில் கையொப்பமிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமைச் செயலகம் வந்த சில நிமிடங்களிலேயே சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதிகாரிகள் தரப்பில் போதிய தரவுகள் இல்லை எனக் கூறியபோதும், "இப்போதே கூட்டம் நடத்த வேண்டும், நான் சொல்வதைக் கவனியுங்கள்" எனக்கூறி கூட்டத்தைத் தொடங்கினார். அமைச்சர்கள் இன்றி அதிகாரிகளுடன் மட்டும் தனிப்பட்ட முறையில் இந்த ஆலோசனையை நடத்தினார்.

போலீசாருக்குச் சுதந்திரம்: 

குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இதில் அரசியல் தலையீடுகள் இருக்காது. குற்றம் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடக்காமல் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடவாமல் தடுக்கக் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் ஒழிப்பு: 

"போதைப்பொருள் இல்லாத தமிழகமே எனது இலக்கு" எனத் தெரிவித்த அவர், இதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என உத்தரவிட்டார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தின் சிறிய நிகழ்வு கூட தனது கவனத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்திலேயே மதிய உணவை முடித்த முதலமைச்சர் விஜய், பிற்பகல் 3:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பெரியார் திடல் நோக்கிச் சென்றார். அவர் சென்ற வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory