» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)

தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20-ஆம் தேதி) புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, தமிழ் ஆவணப் படங்கள் மற்றும் திரைத்துறை மேம்பாடு தொடர்பாக அரசிடம் அளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

புத்தக வெளியீட்டிற்குப் பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:   "தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 100% கச்சிதமாக நிறைவடைந்து, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நாளை மறுநாள் வருகிற 20-05-2026 (புதன்கிழமை) காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (10th Public Exam Results) முறைப்படி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டுத் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory