» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசிரியை தற்கொலை முயற்சி: குருவானவரை மாற்றக் கோரிப் பெண்கள் திரண்டு முற்றுகைப் போராட்டம்!

ஞாயிறு 28, ஜூன் 2026 10:48:36 AM (IST)



தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ திருச்சபைக்குச் சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்குக் பணியாற்றி வரும் குருவானவரை மாற்றக் கோரிப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆலயத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குருவானவராகக் காலேப் மான்சிங் பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த வேத பாட ஆசிரியை சுபா என்பவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆசிரியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்துத் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, குருவானவர் காலேப் மான்சிங் மீது கடந்த ஜூன் 14-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆலய வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "இந்த ஆலயத்திற்குக் காலேப் மான்சிங் வந்த நாள் முதல் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகின்றன. ஊழியம் செய்ய வரும் பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தி வருகிறார். வயது முதிர்ந்தவர்கள் ஊழியம் செய்யக் கூடாது என்றும், தனது பேச்சைக் கேட்பவர்கள் மட்டுமே ஊழியம் செய்ய முடியும் என்றும் வற்புறுத்துகிறார். 

இதனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பேராயரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இவரை உடனடியாக மாற்றிவிட்டு வேறு புதிய குருவானவரை நியமிக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, குருவானவரின் தூண்டுதலின் பேரில் ஆலய ஊழியர் ஒருவர் தங்களைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறி போராட்டக்காரர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்ததைக் கண்டித்து நடந்த இந்த வாக்குவாதத்தால் ஆலய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory