» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை!

ஞாயிறு 28, ஜூன் 2026 1:12:12 PM (IST)



தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அம்மனுவில், திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றை தற்போதைய நடைமுறைப்படி திருநெல்வேலிக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே போதிய தண்டவாள வசதிகள் இருப்பதால், அங்குப் புதிய பிட் லைன் (Bit Line) வசதி அமைக்கப்பட்டால் ரயில்களை அங்கேயே பராமரிக்க முடியும் என்றும், இது திருச்செந்தூருக்குக் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் சித்ராங்கதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் பயணத் தேவையைத் தீர்க்கச் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்குப் புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது திருநெல்வேலி - மும்பை இடையே இயக்கப்பட்டு வரும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலைத் திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிகழ்வின் போது வர்த்தகப் பிரிவு மாநிலத் தலைவர் சதீஷ் ராஜா, மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன், திருச்செந்தூர் மண்டல் தலைவர் செல்வகுமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory