» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!

சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுவனுடன் பழகி கர்ப்பமான 19 வயது இளம்பெண் மீது, சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்குத் திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கணவர் மற்றும் குடும்பத்தினர் குறித்துக் கேட்டபோது, அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட இளம்பெண், குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் விமானப் பணியாளருக்கான ஓராண்டு படிப்பில் சேர்ந்துள்ளார். அந்தப் பிரிவில் இவரும், களியக்காவிளையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரும் மட்டுமே படித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது வீட்டிற்குச் சென்று அந்த இளம்பெண் பழகி வந்ததாகவும், அதில் அவர் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையிலும் இதனைப் பெற்றோரிடம் மறைத்துவிட்டுத் தனியாக மருத்துவமனைக்கு வந்தபோதுதான் இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தகவலறிந்த சிறுவனின் தாயார், தங்கள் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தித் தனது மைனர் மகனைக் கட்டாயப்படுத்திச் தவறான பழக்கத்தில் ஈடுபடுத்தியதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவனைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக 19 வயது இளம்பெண் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory