» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

200 யூனிட் இலவசம் எனக்கூறி 4 மடங்கு மின்கட்டண உயர்வு: சீமான் கடும் கண்டனம்!

சனி 1, ஆகஸ்ட் 2026 3:40:42 PM (IST)

ebmeterSeeman.jpg

தமிழ்நாட்டில் தவெக அரசு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கம் போலன்றி 4 மடங்கு வரை மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்வாரிய ஊழியர்கள் தாமதமாக மின் அளவீடு எடுத்ததும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காததுமே இந்தத் தாறுமாறான கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணம்.

200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. கணக்கீட்டுத் தாமதத்தால் மின் பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் அதிகரித்ததால், 200 யூனிட் இலவசச் சலுகை பறிபோனதுடன், ஓர் அலகிற்கான (Unit) கட்டண விகிதமும் உயர்ந்துள்ளது.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என்றும், அதுவும் 500 யூனிட் வரை மட்டுமே பயன்படுத்துபவர்களுக்குச் செல்லும் என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது.

தற்போது கணக்கீட்டுக் குளறுபடிகள் மூலம் வழக்கம் போலன்றிப் பன்மடங்கு கட்டணத்தை உயர்த்தியிருப்பது பெருங்கொடுமையாகும். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். மின்னிலக்க அளவீட்டுக் கருவியை (Digital/Smart Meter) விரைந்து பொருத்த வேண்டும்.

மின் கணக்கீட்டுக் குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ள மின் கட்டணத்தை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். என சீமான் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory