» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகளைத் திருடிச் சென்ற வழக்கில், த.வெ.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாகக் கடத்தி வரப்பட்ட சீனப் பட்டாசுகளைக் கடந்த ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் உள்ள கண்டெய்னர் பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அந்தச் சீனப் பட்டாசுகளை அழிப்பதற்காகக் கஸ்டம்ஸ் அதிகாரிகள் குடோனுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, கண்டெய்னர் பெட்டியின் சீல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கஸ்டம்ஸ் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிப்காட் காவல் ஆய்வாளர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

போலீசாரின் தீவிர விசாரணையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் பெரியசெல்வம் நகரைச் சேர்ந்த வழக்கறிஞரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி அமைப்பாளருமான ஜேசுதாஸ் (40) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

இது தாெடர்பாக தூத்துக்குடி அன்னை தெரசா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (30), ராஜீவ் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் (24), மீளவிட்டான் சில்வர்புரத்தைச் சேர்ந்த அனுஜித் ஜான்சன் (30), முனியசாமி நகரைச் சேர்ந்த அந்தோணி ராஜேஷ் குமார் (42), கிருஷ்ணராஜபுரம் அய்யர்விளையைச் சேர்ந்த சக்திவிஜய் (26) மற்றும் தாளமுத்துநகர் பெரியசெல்வம் நகரைச் சேர்ந்த வழக்கறிஞரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி அமைப்பாளருமான ஜேசுதாஸ் (40) ஆகிய 6 பேரையும் சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory