» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதன் 24, ஜூலை 2024 5:49:51 PM (IST)

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் 1,302 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 215 கி.மீ. என்ற அடிப்படையில் மொத்தம் 2152 கி.மீ. தூரம் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது. 687 ரயில்வே மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது 22 புதிய ரயில்பாதை திட்டங்கள் ரூ.33 ஆயிரத்து 467 கோடிக்கு நடந்து வருகிறது. அம்பாசமுத்திரம், அம்பத்தூர், சென்னை கடற்கரை, எழும்பூர், பூங்கா, சிதம்பரம், மதுரை, கோவில்பட்டி, ராமேஸ்வரம், நெல்லை உள்பட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்களாக மாற்றப்படுகிறது.

ரயில்வே பாதுகாப்பு விஷயங்களுக்காக நாடு முழுவதும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. ரயில் டிரைவர்கள் விஷயத்தில் அரசியல் காரணங்களுக்காக பிரச்சினை எழுப்பப்படுகிறது. ரயில் டிரைவர்களுக்கு விதிகளின்படி ஓய்வு, ஏ.சி. அறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. வசதிகள் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்கும் பணியில் சுணக்கம் உள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இருபக்கமும் பயன்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2,749 ஹெக்டேர் நிலம் ரயில்வேக்கு தேவைப்பட்டது. இதில் 807 ஹெக்டேர் நிலம்தான் கிடைத்து இருக்கிறது. ராமேசுவரம்-தனுஷ்கோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் எடுப்பு பிரச்சினைகளால் அந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.ரயில்வேக்கான ஆட்கள் தேர்வும் இந்த ஆட்சியில் அதிகமாகத்தான் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுதவிர ரயில்களில் ரூ.1,112.57 கோடியில் ‘கவாச்’ என்னும் தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் பொருத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory