» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போர் பதற்றங்களுக்கு இடையிலும் உயர்ந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி: ரிசர்வ் வங்கி அறிக்கை
சனி 16, மே 2026 12:21:02 PM (IST)
மேற்கு ஆசியப் பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகப் பாதிப்புகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் சுமார் 6.295 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 696.988 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ. 66 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவாக 728.494 பில்லியன் அமெரிக்க டாலராக வரலாற்று உச்சத்தைத் தொட்டிருந்தது. எனினும், அதன் பின்னர் மேற்கு ஆசியாவில் வெடித்த போர்ச் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி டாலர்களைச் சந்தையில் அதிகளவில் விற்க வேண்டியிருந்ததாலும், தங்க இறக்குமதி அதிகரித்ததாலும், கையிருப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் கையிருப்பு 690.693 பில்லியன் டாலராகக் குறைந்திருந்தது.
மே 1-ஆம் தேதி ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த வாரத்திலேயே நிலைமை சீராகி அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. மே 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த அறிக்கை வாரத்தின்படி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய விபரங்கள்: ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி: $6.295 பில்லியன் உயர்ந்து, தற்பொழுது $696.988 பில்லியனாக உள்ளது.
தங்கக் கையிருப்பு : உலக அளவில் தங்கம் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்தியாவின் தங்கக் கையிருப்பு மதிப்பும் ஒரே வாரத்தில் 5.637 பில்லியன் டாலர் அதிகரித்து, மொத்தம் 120.853 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ. 11 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இதுவே ஒட்டுமொத்த கையிருப்பு உயர முக்கியக் காரணமாகும்.
கையிருப்பின் முக்கியப் பகுதியான அந்நிய நாணய சொத்து மதிப்பு 562 மில்லியன் டாலர் அதிகரித்து 552.387 பில்லியன் டாலராக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இந்தியாவின் கையிருப்பு நிலை 12 மில்லியன் டாலர் அதிகரித்து 4.875 பில்லியன் டாலராகவும், சிறப்பு எடுப்புரிமை (SDR) மதிப்பு 84 மில்லியன் டாலர் அதிகரித்து 18.873 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தை நெருக்கடிகளுக்கு இடையே, ரிசர்வ் வங்கியின் இந்தச் சாதகமான அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு தற்காலிகமாக ஒரு வலுவான நிம்மதியை அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)

செப்.30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
வெள்ளி 15, மே 2026 12:03:01 PM (IST)

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சதத்தை நெருங்கியது: லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்வு
வெள்ளி 15, மே 2026 11:38:49 AM (IST)


