» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!

செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)



லக்னோவில் உள்ள வணிகக் கட்டிட அனிமேஷன் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் உஷா மார்க் பகுதியில் உள்ள மூன்று மாடி வணிகக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று பிற்பகலில் இந்த மையத்தின் ஒரு பகுதியில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவெனப் பரவியதால் கட்டிடத்திற்குள் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வெளியேற முடியாமல் சிக்கிய மாணவர்கள் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் சிலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து 14 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், ஹைட்ராலிக் ஏணி மூலம் அருகில் உள்ள கட்டிடம் வழியாக மாடிக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவினர்.

தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் துளை போட்டு உள்ளே சென்று பார்த்தபோது மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்த செல்லப்பிராணிகள் சிகிச்சை மையத்திற்கும் தீ பரவியதால் சில விலங்குகளும் உயிரிழந்தன.

இந்த விபத்திற்குத் திரவுபதி முர்மு, ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விபத்து நடந்த போது அலிகாரில் இருந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு லக்னோ விரைந்தார். சம்பவ இடத்திற்கு மாநில உள்துறை கூடுதல் செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபியைச் செல்ல அறிவுறுத்திய அவர், விபத்து குறித்து முழுமையான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory