» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை: இந்திய ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!

ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:36:25 AM (IST)

அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசாக்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்கக் கனவில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களில் உயர்தகுதி கொண்ட வெளிநாட்டினரை பணியமர்த்த வழங்கப்படும் இந்த எச்-1பி விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்தியர்களே பெற்று வருகின்றனர். குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

அரிசோனா மாநில எம்.பி. யெலி கிரேன் தாக்கல் செய்துள்ள ‘எச்-1பி விசா முறைகேட்டை முடிவுக்குக் கொண்டு வரும் சட்டம்-2026’ என்ற மசோதாவில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான பரிந்துரைகள்:

புதிய எச்-1பி விசாக்கள் வழங்குவதை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்தி வைத்தல்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 65 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாகக் குறைத்தல்.

விசா பெறுவோருக்கான குறைந்தபட்ச ஆண்டுச் சம்பளத்தை 2 லட்சம் டாலராக (சுமார் ரூ.1.88 கோடி) நிர்ணயித்தல்.

விசா பெற்று அமெரிக்கா வருபவர்கள் தங்களது குடும்பத்தினரை (H-4 விசா மூலம்) அழைத்து வரக் கூடாது.

லாட்டரி முறையை ரத்து செய்துவிட்டு, அதிக சம்பளம் பெறும் தகுதியானவர்களை மட்டும் தேர்வு செய்தல்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்த எம்.பி.க்கள், "அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம். பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக மலிவான விலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் ஆவதை நாங்கள் விரும்பவில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களுக்குப் பாதிப்பு: ஏற்கனவே கடந்த ஆண்டு விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த 3 ஆண்டுத் தடை மசோதா இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கும், அங்குப் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்தியர்களின் அமெரிக்கக் கனவு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory