» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வடகிழக்கு பருவமழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்வு

வெள்ளி 10, நவம்பர் 2023 12:46:09 PM (IST)

நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் 2 மாவட்டங்களிலும் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. திடீரென கனமழை பெய்வதும், சிறிது நேரம் சாரல் மழை பெய்வதுமாக இருந்து வந்தது. மாநகர பகுதியிலும் இதே நிலை தான் நீடித்தது. மாநகரில் பெரும்பாலான சாலைகள் மழையால் கடுமையான சேதம் அடைந்துள்ளது. பாளை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேரன்மகா தேவியில் 14.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, அம்பை, ராதாபுரம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இன்று காலை வரையிலும் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இன்று காலையில் மணிமுத்தாறு அணை 1 அடி உயர்ந்து 63.23 அடியாக உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 92 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையிலும் நீர் இருப்பு 1 அடி அதிகரித்து 106 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 625 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அவற்றில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71.90 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 73.25 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 65.25 அடியாகவும் உள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 7 அடி நீரே தேவைப்படுகிறது. அங்கு பெய்துவரும் மழையால் வினாடிக்கு 46 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ராமநதியில் அதிகபட்சமாக 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

மிகச்சிறிய அணையான குண்டாறு அணை 35.50 அடியை எட்டியுள்ளது. அது தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி இன்னும் அரை அடி நீரே தேவைப்படுவதால் இன்று மாலைக்குள் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் தொடர்ந்து 111 அடியில் நீடிக்கிறது.

மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory