» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நிலத்தை போலி பத்திரப்பதிவு: கிராம நிர்வாக அலுவலருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை!
ஞாயிறு 20, அக்டோபர் 2024 9:02:05 AM (IST)
நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கம்மாள். இவருடைய பெற்றோர் வெங்கடசாமி-லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான 2.52 ஏக்கர் நிலம் ஓட்டப்பிடாரம் அருகே கொல்லங்கிணறு கிராமத்தில் உள்ளது.
இந்த இடத்தை ரெங்கம்மாள், அவரது சகோதரி நளினி ஆகியோரது பெயரில் மணியாச்சியை சேர்ந்த முருகன் போலியாக பவர் பத்திரம் தயாரித்து பதிவு செய்ததாகவும், இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அய்யலுசாமி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்னர் 2009-ம் ஆண்டு அந்த இடம் முருகனின் மனைவி மாடத்தி பெயரிலும், 2010-ம் ஆண்டு கொல்லங்கிணறை சேர்ந்த ஆனந்த சுதர்சன் பெயரிலும் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி அறிந்த ரெங்கம்மாள் இதுகுறித்து நாரைக்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஓட்டப்பிடாரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அய்யலுசாமிக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மாடத்தி, ஆனந்த சுதர்சன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கு நடந்த காலத்தின்போது முருகன் இறந்துவிட்டார். இந்த வழக்கில் மனு தாரர் தரப்பில் வக்கீல் விஜி வாதாடினார்.
ஜெகதீசன் தூத்துக்குடிOct 20, 2024 - 11:01:46 AM | Posted IP 162.1*****