» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கடன் தகராறில் பெண் சரமாரி தாக்கி கொலை : அண்ணன்-தம்பி கைது!

ஞாயிறு 20, அக்டோபர் 2024 9:05:34 AM (IST)

நெல்லையில் கடன் தகராறில் சரமாரியாக தாக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 60). இவர் காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார். இவருடைய மகன் கண்ணன் (35). இவர் டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.

சாவித்திரி, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிமுத்து (35) என்பவரிடம் கடனாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு வட்டி செலுத்துவது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் காளிமுத்து, அவரது தம்பி ஆனந்த் (33), உறவினர் கணேசன் ஆகியோர் கண்ணனை தேடி நயினார்குளம் மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு அவரிடம் பணத்தை கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் கண்ணனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காளிமுத்து, ஆனந்த் ஆகிய 2 பேரும் சி.என்.கிராமத்துக்கு சென்றனர். அங்கு சாவித்திரி வீட்டில் புகுந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து சந்திப்பு போலீசார் ஏற்கனவே கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் சாவித்திரி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து காளிமுத்து, ஆனந்தை பிடித்து கைது செய்தனர். மேலும், கண்ணனை வெட்டிய வழக்கில் தச்சநல்லூர் போலீசார் கணேசன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory