» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 11:57:56 AM (IST)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு சுமார் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டியிலும் சாரல் அடித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 16 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. எனினும் மழை பொழிவு எதுவும் இல்லை. பாபநாசம் அணையில் தற்போது 93.45 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் 105.18 அடியும், மணிமுத்தாறில் 63.64 அடியும் நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது. அதிகபட்சமாக கருப்பாநதியி 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், சங்கரன்கோ விலில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.