» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டீரிங் கட் ஆனதால் வயலில் பாய்ந்த அரசு பஸ்: பெண் பலி; 10 பயணிகள் படுகாயம்
வெள்ளி 6, ஜூன் 2025 8:32:34 AM (IST)

பாப்பாக்குடி அருகே ஸ்டீரிங் கட் ஆனதால் அரசு பஸ் வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று காலையில் புறப்பட்டது. இந்த பஸ்சை பாப்பாக்குடி அருகே உள்ள இடைகால் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவர் ஓட்டினார். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இடைகால் பகுதியில் பஸ் வந்தபோது அதன் ஸ்டீரிங் துண்டானதாக கூறப்படுகிறது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. அதில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். பின்னர் பஸ் சாலையோரத்தில் உள்ள வயலில் பாய்ந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பாப்பாக்குடி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்த விபத்தில் அணைந்தநாடார்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்தப்பா மனைவி ஜெயலட்சுமி (42), கபாலிபாறையை சேர்ந்த சுசீலா உள்பட 11-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் இறந்த ஜெயலட்சுமிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது கோவில் திருவிழாவுக்காக அவர் சொந்த ஊருக்கு வந்தபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)

கஞ்சா, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 5, ஜூன் 2025 4:21:55 PM (IST)

அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:34:46 PM (IST)

குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
புதன் 4, ஜூன் 2025 4:19:00 PM (IST)

வீடுபுகுந்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை : தோல் வியாபாரி கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:47:10 PM (IST)

நெல்லையில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:29:08 PM (IST)
