» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 18, ஜூன் 2025 8:37:30 AM (IST)

கூடங்குளம் அருகே கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட முன்விேராதத்தில் வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது..

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூந்தன்குழியை சேர்ந்தவர் ஜேசு அருளப்பன் மகன் ரீகன் (22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காந்தி என்ற சிலுவை அந்தோணி மகன் கணேசன் (40) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரீகன், அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து கணேசனை தாக்கினர்.

இந்த வழக்கு தொடர்பாக ரீகன் உள்ளிட்டவர்கள் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தனர். அதன்படி 22.1.2008 அன்று ரீகன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது நண்பர்களுடன் டிரக்கரில் ஏறி ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.

கூடங்குளம் அடுத்த விஜயாபதி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் டிரக்கரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீகனை கொலை செய்ய முயன்றனர்.

அப்போது கணேசன், கணேசனின் தந்தை சிலுவை அந்தோணி, தம்பி சிலம்பரசன் உள்ளிட்ட பலர் ரீகனை தப்பிச் செல்ல விடாமல் சுற்றிவளைத்து அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் ரீகனுடன் வந்த நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக சிலுவை அந்தோணி (66), கணேசன், சிலம்பரசன் (39), ஜான்பால் என்ற சேசுவடியான்பால் (42), வினோ என்ற வினோத் (40), சஞ்சய் (44), அன்றன் (41), ஜேம்ஸ் (39), மிக்கேல் (43), அந்தோணி மிக்கேல் (39) உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது 3 பேர் உயிரிழந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட சிலுவை அந்தோணி, கணேசன், சிலம்பரசன், சேசுவடியான்பால், வினோத், சஞ்சய், அன்றன், ஜேம்ஸ், மிக்கேல், அந்தோணி மிக்கேல் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்தார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காளிமுத்து ஆஜரானார். வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory