» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்

வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)



கயத்தாறு, நாங்குநேரி சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்கள் செல்ல ஊழியர் அனுமதி அளித்தனர். சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் கப்பலூர், எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்கள் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ளதாகவும், அதில் இன்னும் ரூ.276 கோடியை செலுத்தாமல் உள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அந்த சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நிலுவைத்தொகையை அரசு போக்குவரத்துக்கழகம் தராததால் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள், பஸ்களை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 10-ந் தேதி (அதாவது நேற்று) முதல் அரசு பஸ்களை மேற்கண்ட 4 சுங்கச்சாவடிகள் வழியாக இயக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், சாலைப்புதூர் ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு அனுமதி இல்லை என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வரும் 31ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவு 12 மணி முதல் வந்த அரசு பஸ்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் டிரைவர்களிடம் நீதிமன்ற உத்தரவு குறித்தும், பயணிகள் நலன் கருதி தற்போது பஸ்களை அனுமதிப்பதாகவும், உங்கள் பாஸ்டேக்கில் போதிய பணத்தினை வைக்கும் படியும், இதனை உங்கள் போக்குவரத்து அலுவலக மேலாளரிடம் தெரிவிக்கும் படியும் கூறினர்.

மேலும் டிரைவர், கண்டக்டர்களிடம் ஒரு விண்ணப்பத்தை காட்டி, அதில் கையெழுத்து வாங்கிவிட்டு பஸ்களை அனுப்பி வருகின்றனர். அந்த விண்ணப்பத்தில் பஸ் எங்கிருந்து வருகிறது?, வண்டி எண், டிரைவர், கண்டக்டர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருந்தது. அதில் சில டிரைவர், கண்டக்டர்கள் கையெழுத்து போட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த நெல்லை அரசு போக்குவரத்து கழக ஆய்வாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் கூறியதும் கையெழுத்து போட்டனர்.

சுங்கச்சாவடி ஊழியர்கள் இதுபோல ஒவ்வொரு பஸ்களுக்கும் விவரங்களை கூறி, கையெழுத்து பெறும் காரணத்தினால் அரசு பஸ்கள் சுங்கச்சாவடியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நின்று செல்வதால் காலதாமதம் ஏற்பட்டது. இதேபோல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் கட்டணம் செலுத்தாத பஸ்கள் அங்குள்ள செக்போஸ்ட்டில் நிறுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory