» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)

குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று பரவலாக மழை கொட்டி தீர்த்தது.  மழையின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் இன்று மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்த நிலையில் இன்று காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்தது. நாகர்கோவிலிலும் காலை 8:30 மணிக்கு பெய்ய தொடங்கி மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. தக்கலை, இரணியல், திருவட்டார், குலசேகரம், தடிக்காரங்கோணம், கீரிப்பாறை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. 

திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. கடலோர பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்தது. இதனால் அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வர தொடங்கியது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 28.13 அடியாக இருந்தது. அணைக்கு 114 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 135 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.60 கன அடியாக உள்ளது. அணைக்கு 21 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது. இன்று அணையின் நீர்மட்டம் மைனஸ் 19.40 அடியாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory