» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏ.டி.எம். எந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை: 3 பேர் கைது
செவ்வாய் 27, மே 2025 8:33:06 AM (IST)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்த உத்தரபிரதேச மாநில ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வந்த ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தில், ஏ.டி.எம். கார்டை போட்டு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, பணம் வராது. ஆனால் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும். ஆனால் அந்த பணம் எங்கே போனது. எப்படி மாயமானது என்பது புரியாத, புதிராக இருந்தது.
வங்கி கணக்கில் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளுக்கு சென்று புகார் அளித்தனர். இதுதொடர்பாக நிறைய புகார்கள் வந்தன.
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டனர். எனவே குறிப்பிட்ட அந்த ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்யுமாறு மும்பையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏ.டி.எம். எந்திரங்களில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று கருதி உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்பேரில் ஏ.டி.எம். எந்திரத்தை தயாரித்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் திருவான்மியூரில் உள்ள குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை ஆய்வு செய்தனர்.
அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 3 மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்தில் நுழைகிறார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த கள்ளச்சாவி மூலம் ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்க கதவை திறக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது அந்த பணம் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கம் நுழைவுவாயில் வழியாக வெளியே வரும். ஆனால் அவ்வாறு வெளியே வரவேண்டிய பணம், வெளியே வராமல் ஒரு கருப்பு ஸ்டிக்கர் அட்டையை சொருகி தடுக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டிய பணம் வெளியே வராமல் கருப்பு அட்டை உள்ள இடத்தில் தேங்கி நிற்கிறது. இந்த மர்ம நபர்கள் கள்ளச்சாவி மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து தேங்கி நிற்கும் பணத்தை அப்படியே கொள்ளையடித்து கொண்டு தப்பிச் செல்கிறார்கள். தப்பி செல்வதற்கு முன்பாக மீண்டும் அதே கருப்பு அட்டையை பணம் வரும் இடத்தில் சொருகி வைத்துவிட்டு கள்ளச்சாவி மூலம் ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்கத்தை மூடிவிட்டு செல்கிறார்கள். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தன. இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபோன்ற நூதன தொழில்நுட்ப முறையில் ‘நோகாமல் நுங்கு சாப்பிடுவது போல' மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபோன்ற நூதன கொள்ளை சம்பவம் முதன் முதலாக அரங்கேற்றப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
நீலாங்கரை உதவி கமிஷனர் பரத் தலைமையில் 2 தனிப்படைகள் இதற்காக அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த 3 மர்ம நபர்களையும் தேடிவந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்து அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து ரெயில் மூலம் சென்டிரலுக்கு சென்றுள்ளனர்.
சென்டிரலில் இருந்து ரெயிலை பிடித்து தப்பி சென்றுள்ளனர். ஒரு கொள்ளை வேட்டையை முடித்துக்கொண்டு ஒருவார இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து கொள்ளை திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இந்த 3 கொள்ளையர்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற ஏராளமான ஏ.டி.எம். மையங்களில் புகுந்து வாடிக்கையாளர்களின் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த வாரம் கைவரிசை காட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கொள்ளையர்கள் 3 பேரும் திருவான்மியூர் பகுதியில் கைவரிசை காட்டுவதற்கு வந்தனர்.
ஒரு ஏ.டி.எம். மையத்துக்குள் அவர்கள் நுழைந்தபோது தனிப்படை போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 3 பேரும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களது பெயர் குல்தீப் சிங் (வயது 26), பிரீச் பான் (30), சுமித் யாதவ் (33) என்பது ஆகும்.
கைதானவர்களிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை திறக்கும் கள்ளச்சாவி, பணத்தை முடக்கும் கருப்பு நிற ஸ்டிக்கர் அட்டைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரியளவில் கொள்ளை வேட்டை நடத்தியதாக கைதான 3 கொள்ளையர்களும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுபோல் நூதன முறையில் கொள்ளையடிக்க கற்றது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த வாக்குமூலத்தில், ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்க்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும், அப்போது பணத்தை கொள்ளையடிப்பது எப்படி? என்பதை பலமுறை செய்து பார்த்ததாகவும், ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்க கதவை திறக்கும் கள்ளச்சாவியை எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்றறிந்ததாகவும் தெரிவித்தனர்.
முதலில் வடமாநிலங்களில் கைவரிசை காட்டியதாகவும், போலீசாரால் தங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதைத்தொடர்ந்து சென்னைக்கு வந்து கடந்த 2 மாதங்களாக கைவரிசை காட்டினோம் என்றும், இப்போதுதான் முதன் முதலில் பிடிபட்டுள்ளோம் என்றும் கூறினார்கள்.
கொள்ளையடித்த லட்சக்கணக்கான பணத்தில் செலவு செய்தது போக மீதமுள்ள பணத்தை தங்கள் குடும்பத்தினரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். எனவே அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று விசாரணை நடத்துவதற்கு தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைதான 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துவிட்டு மீண்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நூதன கொள்ளை சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் இருப்பது இல்லை. இதனால் கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விட்டது. ஆனால் கண்காணிப்பு கேமரா இருப்பதை அவர்கள் கவனிக்காததால் அதன் மூலம் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதுபோன்ற கொள்ளை சம்பவத்தை தடுப்பது குறித்து வங்கி அதிகாரிகள் மட்டத்திலும் உரிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)
