» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உதவி செய்ததை தடுத்து த.வெ.க. பெண் நிர்வாகிகள் மீது காவல்துறை தாக்குதல் : சீமான் கண்டனம்

புதன் 28, மே 2025 10:38:34 AM (IST)

த.வெ.க. பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக தி.மு.க. அரசு காவல்துறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

ஜனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை அனைவருமே மக்களுக்கு தொண்டு செய்யும் சேவகர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததை தடுத்து நிறுத்தி தி.மு.க. அரசின் காவல்துறை தாக்கியது ஏன்?

உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்க வேண்டியது நல்ல அரசின் முழுமுதற் கடமையாகும். தி.மு.க. அரசு செய்யத்தவறியதை ஓர் அரசியல் இயக்கத்தினர் தாமாக முன்வந்து உதவினார்கள் என்றால் அதை தட்டிகொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்து நிறுத்தி, தாக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் தி.மு.க. பெற்றுத்தந்த சமூக நீதியா?

தி.மு.க. அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!ஆகவே, த.வெ.க. பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு உதவுதைக்கூட தடுத்து தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory