» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு

வியாழன் 29, மே 2025 9:06:01 AM (IST)



தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி கடந்த 23-ஆம் தேதி தருவைகுளத்தில் தொடங்கியது. அங்கு 215 விசைப்படகுகளும், கடந்த 26-ஆம் தேதி வேம்பாரில் நடைபெற்ற ஆய்வில் 28 விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி நேற்று  நடைபெற்றது. இதில், உதவி இயக்குநர் ஜெனார்த்தனன் தலைமையிலான 6 ஆய்வுக் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட 183 விசைப்படகுகள், பதிவு செய்யப்படாத 66 விசைப்படகுகள் என மொத்தம் 249 விசைப்படகுகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். இதில், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதனை நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் 6-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory