» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
வியாழன் 29, மே 2025 3:11:27 PM (IST)

ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் "உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் "உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டாரம், ஜெகவீரபாண்டியபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நடைபெற்ற "உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்ட முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி, வேளாண் கண்காட்சியினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் பெருங்குடி மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், வேளாண் விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும் வேளாண்மையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்ற அடிப்படையில் உழவரைத் தேடி – வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தலா இரண்டு கிராமங்கள் வீதம் 22 கிராமங்களில் உழவரைத் தேடி – வேளாண்மை-உழவர் நலத்துறை திட்ட முகாம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, வேளாண்மைக்கென ஐந்து தனிநிலை அறிக்கைகளை அளித்து, அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திட 1,94,076 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
தரிசு நிலங்களை சாகுபடிக்கு உகந்ததாக மாற்றி, நீர் ஆதாரங்களை உருவாக்கி கவனமாக மின்சாரம் வழங்கி சிக்கனமாக நீரை பயன்படுத்திட சொட்டு நீர்பாசனக் கருவிகளை அமைத்து, நீண்ட நாட்கள் பயன்தரும் பழமரக்கன்றுகளை நடவுசெய்து, நிலையான வருமானத்திற்கு வித்திட்ட திட்டம் ”கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். அதிக அளவில் இரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண் வளம் குன்றி, மகசூல் குறைந்து, உணவு தானியங்களில் நச்சுத்தன்மை ஏற்படுவதை தவிர்த்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம். காலநிலை மாற்றத்தினை எதிர்கொண்டு, குறைந்த நீரில், வெப்பத்தினை தாங்கி வளரும் சிறுதானியப் பயிர்களின் சாகுபடி மூலம் விவசாய வளரச்சியை நிலைப்படுத்திட தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.
தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரித்திடவும், உழவர்களின் வருமானத்தைப் பெருக்கிடவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தொழில்நுட்பங்களுடன், திட்டங்களையும் ஒருங்கிணைத்து உழவர்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும். உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர்.
எனவே, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து, தொழில்நுட்பங்களை வழங்கி அதற்கான திட்டங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக எவ்வித திட்டமும் தமிழ்நாட்டில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கருத்திற் கொண்டு 2025-26ஆம் ஆண்டு வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கையில் ”உழவர்களைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 479 கிராமங்களில் இந்த ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகள் உழவர்களுக்கு அவர்களுடைய கிராமத்திற்குச் சென்றே வழங்கப்பட உள்ளது. மேலும், அரசு நலத்திட்டங்கள் வெகு விரைவாக உழவர்களை சென்றடையவும், 15 நாட்களுக்கு ஒரு முறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதில் நவீன தொழில்நுட்பங்களின் பங்கு இன்றியமையாததாகும். இத்தொழில் நுட்பங்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்த உழவரைத்தேடி வேளாண்மை – உழவர்நலத்துறை திட்டம் வழிவகுக்கிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேலும் மேம்படுத்தும் விதமாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 2025-2026-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் போன்ற அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமங்களுக்கு சென்று உழவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதோடு, வேளாண்மையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் வேளாண்மை - உழவர் நலத்துறையின் திட்டங்களை எடுத்துக்கூறி பயன்பெறும் வகையில்
மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும்.
வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் ஒவ்வொரு துறையிலும் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விவரங்களை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்லும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 479 வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சியாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வழியாக கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுத்துறையின் வழியாக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாடு வளர்ப்பிற்கு ஒரு மாட்டிற்கு ரூ.60,000/-மும், ஆடு வளர்ப்பிற்கு ரூ.40,000/-மும், கோழி வளர்ப்பிற்கு ரூ.15,000/-மும் 9.5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி விவசாயிகள் பயிரிடும் மக்காச்சோளம், உளுந்து, பச்சைபயறு, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய பயறுகளின் உற்பத்தித் திறன் மற்றும் மகசூலை அதிகரிக்கச்செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சியாக பல்வேறு தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியினை திரட்டி கிட்டத்தட்ட 1500 விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டை அமைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொண்டு விவசாயம் செய்து பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை நாடி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை சார்பில் 9 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் பயிர் வளர்ச்சி ஊக்கி இடுபொருட்களையும், ஒரு விவசாயிக்கு 50 சதவீதம் மானியத்தில் மருந்து தெளிப்பான்களையும், ஒரு விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் பேட்டரி தெளிப்பானையும், ஒரு விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் தார்ப்பாயும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளையும், 3 விவசாயிகளுக்கு மாடித் தோட்ட தொகுப்புகளையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 4 விவசாயிகளுக்கு தாது உப்புக் கலவைகளையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் போன்ற துறைகளின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட கருத்துக் கண்காட்சியினை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மோன்தாஸ் சௌமியன், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை : அன்புமணி பேட்டி
வெள்ளி 30, மே 2025 5:29:02 PM (IST)

போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3பேர் காயம்: வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 30, மே 2025 4:12:41 PM (IST)

வைகோவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்கும் என நம்பினோம்: துரை வைகோ வருத்தம்
வெள்ளி 30, மே 2025 3:39:46 PM (IST)

நான் தவறு செய்யவில்லை; மன்னிப்புக் கேட்கப் போவதும் இல்லை: கமல் திட்டவட்டம்!
வெள்ளி 30, மே 2025 3:26:43 PM (IST)

காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
வெள்ளி 30, மே 2025 12:28:08 PM (IST)

மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்றவர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 30, மே 2025 11:51:07 AM (IST)
