» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!

திங்கள் 23, ஜூன் 2025 5:43:04 PM (IST)

தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் வெளியிட்ட பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகக் காவல் துறையில் துவக்க நிலையில் பணியில் சேரும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் (10+5+10) என்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. 

தற்போதுள்ள நடைமுறையின்படி, பணியில் சேரும் இரண்டாம் நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முதல் நிலைக் காவலர்களாகவும், தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தலைமைக் காவலர்களாகவும், அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அதவாது 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெறுவார்கள்.

இந்நிலையில், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தி.மு.க. அரசு காவல் துறையினருக்கு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை ஒன்றை அளிப்பதுபோல், கடந்த 13.6.2025 அன்று செய்தி வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இரண்டாம் நிலைக் காவலர்களாக 10 ஆண்டுகளும்; முதலாம் நிலைக் காவலர்களாக 3 ஆண்டுகளும்; பிறகு தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகளும் பணிபுரிந்தபின், அதாவது 23 ஆண்டுகால பணிக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதலாம் நிலைக் காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின். கடந்த 2021 தி.மு.க. தேர்தல் அறிக்கை எண்.389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் தி.மு.க.விற்கு கை வந்த கலை.

இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory