» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.

விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ரயில்வேத்துறை ஆண்டுதோறும் ரயில்களின் கால அட்டவணையை மாற்றி அமல்படுத்தி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான அட்டவணை ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவ்வாறு கால அட்டவணை தயார் செய்யும் போது நாகர்கோவில்-திருவனந்தபுரம் பயணிகள் ரயில் மற்றும் நெல்லை-நாகர்கோவில் பயணிகள் ரயில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து நெல்லை-நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை ஒரே பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும். இல்லை எனில் திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். புதிய சர்குலர் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

தற்போது காலை நேரத்தில் கொல்லம்-கன்னியாகுமரி மற்றும் புனலூர்-கன்னியாகுமரி ஆகிய 2 பயணிகள் ரயில்கள் கன்னியாகுமரி செல்கின்றன. ஆனால் நாகர்கோவில்-நெல்லை வழித்தடத்தில் பகலில் இடைப்பட்ட நேரத்தில் பயணிகள் ரயில் இல்லை. எனவே இவற்றில் ஏதாவது ஒன்றை நாகர்கோவில் டவுன் வழியாக நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.

அந்தியோதயா ரயில்

கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரயிலின் ஓய்வு நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை என மாற்ற வேண்டும். நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றி அமைக்கலாம். தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயில் புறப்படும் நேரத்தை இரவு 10 மணி என மாற்றி நாகர்கோவிலுக்கு காலை 10 மணிக்குள் வருமாறு பரிந்துரைக்கிறோம்.

கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தை நாகர்கோவிலில் இரவு 8.30 மணி என மாற்ற வேண்டும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கன்னியாகுமரி-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்குள் திரும்பி வருமாறு நேரத்தை மாற்ற வேண்டும். 

திருச்சி இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியலில் தற்காலிக நிறுத்தம் வேண்டும். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் ரயில்களை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் நெரிசல் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory