» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக நீதிபதி ஜோதிமணி தொடரலாம்: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:54:05 PM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக நீதிபதி ஜோதிமணி தொடரலாம், அவரே தேர்தலும் நடத்தலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜூன் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜாண் சந்தோஷம், ரத்தினராஜ் மற்றும் வக்கீல் பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்காக நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி விருந்தினர் மாளிகையில் திருமண்டல தேர்தல் அலுவலகம் ஜூலை 21ம் தேதி முதல் செயல்பட்டு வந்தது. முதற்கட்டமாக செப்டம்பர் 7ம் தேதி திருமண்டல பெருமன்ற மற்றும் சேகரமன்ற சபை பிரதிநிதிகள் தேர்தல் அனைத்து ஆலயங்களிலும் பிர தான ஆராதனையைத் தொடர்ந்து நடைபெறுவதாக அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல்; வேட்பு மனுத்தாக்கல், வாக்கு சேகரிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் செப்டம்பர் முதல் சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் கே.ரூபன் மார்க் ஆணையின்படி, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திரா ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் புதிதாக பொறுப்பேற்றார். 

இதனிடையே சென்னை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சி.எஸ்.ஐ. மாடரேட்டர் ரூபன் மார்க் உத்தரவின் பேரில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் 7.9.2025 முதல் தொடங்கி நடத்தப்படும் தேர்தல்கள் அனைத்தும் அடுத்த நடவடிக்கை, வழி காட்டுதல் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக திருமண்டல பொறுப்பு பேராயர் ஐசக் வரபிரசாத் அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே தென்னிந்திய திருமண்டலம், செப்.7ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு சட்ட விரோதமானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அருள் மேயர், மால் சொர்ண பாண்டியன், ராஜ்மோகன், சின்னராஜா வினோத்குமார், பிராங்ளின் அசப் ஜெபராஜ் ஆகியோர் தென்னிந்திய பெருமண்டல நிர்வாகத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று அளித்த தீர்ப்பில் 'நீதிபதி ஜோதிமணி. அவரது பதவியை தொடர்ந்து தொடரலாம். மேலும் திருமண்டல தேர்தல் நடவடிக்கைகளையும் தொடரலாம். அவரது நிர்வாகத்தில் யாரும் தலையிட முடியாது. சுதந்திரமாக செயல்படலாம்' என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory