» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு : இன்று முதல் அமல்!

வெள்ளி 1, மே 2026 10:21:34 AM (IST)

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் மே மாதத்திற்கான வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி எரிபொருள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிவிப்பில் வணிக சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது.

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ. 993 உயர்ந்து, ரூ. 3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை: கடந்த மாதம் ரூ. 2,031-க்கு விற்பனையான சிலிண்டர், தற்போது ரூ. 3,024 ஆக உயர்ந்துள்ளது.

புது தில்லி: சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 3,071.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதில் இருந்து வணிக சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ரூ. 144-ம், ஏப்ரல் மாதம் ரூ. 200-ம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மே மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு தொழில்துறையினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவுகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுமக்களின் சுமையைக் கருத்தில் கொண்டு 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 928.50 என்ற விலையிலும், தில்லியில் ரூ. 913 என்ற விலையிலும் நீடிக்கிறது. இதேபோல், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விலைகளிலும் இந்த மாதம் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருந்தாலும், விற்பனை விலையை உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் ரூ. 16,000 கோடி இழப்பு ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க விலையேற்றம் அவசியமென நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இக்கட்டான சூழலில் உள்ளது.

சிலிண்டர் முன்பதிவில் புதிய விதிகள் அமல்

விலை மாற்றத்தைத் தொடர்ந்து, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான விதிகளிலும் சில மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன: நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் பெற்று 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும் (முன்பு இது 21 நாட்களாக இருந்தது). கிராமப்புறங்களில் இந்த இடைவெளி 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சொல் (DAC) முறை: சிலிண்டர் விநியோகத்தின் போது முறைகேடுகளைத் தவிர்க்க 'விநியோக அங்கீகாரக் குறியீடு' (Delivery Authentication Code) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி வெறும் ரசீது அல்லது நீல நிறப் புத்தகத்தை மட்டும் காட்டி சிலிண்டர் பெற முடியாது. முன்பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு வரும் ரகசியக் குறியீட்டைத் தெரிவித்தால் மட்டுமே சிலிண்டர் விநியோகிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory